Monday, August 3, 2009

விகடன் சனிப்பெயர்ச்சி பலன்கள் 2009 பாகம் 1


விரோதி வருடம் புரட்டாசி 10-ஆம் தேதி (26.9.2009) சனிக்கிழமை சுக்ல பட்சத்து அஷ்டமி திதி, மூல நட்சத்திரம் நடைபெறும் நாளில், சௌபாக்கிய நாம யோகம், பாலவ நாமகரணம், சித்தயோகத்தில் சூரிய உதயநேரம் போக மதியம் மணி 3:18-க்கு சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்குள் நுழைகிறார் சனி பகவான்.

சிம்ம ராசியில் அமர்ந்திருந்த சனி பகவான் தயவு தாட்சண்யம், கனிவு மற்றும் கலகலப்பான பேச்சுக்கு சொந்தக்காரரான புதனின் வீடான கன்னியில் அமர்கிறார். இதனால் நாட்டில் நல்லதே நடக்கும். மக்கள் அதிகம் யோசிப்பர்.

சுயநலம் அதிகரிக்கும். சிலர், சொந்த பந்தங்களை விட்டு பிரிந்து, பிறகு ஒன்று சேருவர். கூட்டு முயற்சிகள் வெற்றி பெறும்.

குக்கிராமத்தில் இருப்பவரின் உரிமைக் குரலுக்கும் அங்கீகாரம் கிடைக்கும். ஊனமுற்றவர்கள் மற்றும் மன நலம் குன்றியவர்களின் முன்னேற்றத்துக்கு அரசு புதிய சட்ட- திட்டங்களை இயற்றும்.

வித்யாகாரகனான புதனின் வீட்டில் சனி அமர்வதால், கல்வி- பாடத்திட்டங்களில் மாற்றங்கள் நிகழும். மாணவர்களுக்கு தேர்வு பயம் நீங்கும். செயல்முறை கல்வி நடைமுறைக்கு வரும். பள்ளி- கல்லூரி கட்டடங்கள் நவீனமயமா கும். மாணவர்களிடையே விழிப்பு உணர்வு அதிகரிக்கும். யோகாசனம், தியானம் ஆகியன புத்துயிர் பெறும். கிராமியக் கலைகள் மேம்படும்.

இந்தியாவின் கடக ராசிக்கு 3-ஆம் வீட்டில் சனி அமர்வதால் பொருளாதாரம் செழிக்கும். வங்கிகள் கடனை வாரி வழங்கும்.

அமெரிக்காவுடனான அணு ஆயுத ஒப்பந்தம் தொடர்பாக நடைமுறை சிக்கல்களும் போராட்டங்களும் அதிகரிக்கும்.

குஜராத், மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் பாதிப்புக்கு உள்ளாகும். சிறுபான்மை மக்கள் முன்னேறுவர். தீவிரவாதம் கட்டுக்குள் வந்தாலும் வேறு வகையில் முளைக்கும்!

பாகிஸ்தான் அடிபணியும். சீனாவால் அச்சுறுத்தல் அதிகரிக்கும். இலங்கையில் மீண்டும் உரிமைக் குரல் எழும். அரசு நிறுவனங்களின் பங்குகள் அதிகமாக விற்கப்படும். அரசு நிறுவனங்கள் சில, தனியார் மயமாகும். மேல்தட்டு மக்கள் அரசுக்கு நெருக்கம் ஆவார்கள். பங்குச் சந்தையில் ஏற்ற இறக்கம் நிலவும். தங்கம் மற்றும் டீசல் விலை உயரும்.

சனி பகவான் கடல் வீடான மீனத்தை பார்ப்பதால், கடல்வாழ் உயிரினங்களுக்கு ஆபத்து ஏற்படும். கடல் நீர்மட்டம் உயரும்! கம்பு, சோளம், கோதுமை போன்ற தானியங்களின் விளைச்சல் குறையும். நிலத்தின் விலை குறையும்; கட்டுமானப் பொருட்களின் விலையோ அதிகரிக்கும். நரம்புக் கோளாறு, தூக்கமின்மை, மன உளைச்சல் போன்ற பாதிப்புகள் ஏற்படும். இரட்டைக் குழந்தைகளுக்கு ஆபத்து, குழந்தைகளை பாதிக்கும் புதிய நோய்கள் தோன்றலாம்.

விபரீத ராஜயோகம் யாருக்கு?

மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த சனிமாற்றம் திடீர் யோகம் மற்றும் செல்வாக்கை அள்ளித் தரும். சர ராசியில் பிறந்தவர்களுக்கு 11-ஆம் வீட்டுக்கு உரிய கிரகம் பாதக அதிபதியாகிறார். அந்த வகையில் சர ராசியான மேஷ ராசியில் பிறந்தவர் களுக்கு, பாதக அதிபதியான சனி பகவான் 6-ஆம் வீட்டில் அமர்கிறார். இதனால் 'கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்...' எனும் அடிப்படையில் யோகம் உண்டாகும். திருமணம், குழந்தை பாக்கியம், வாகன வசதி, சொத்து சேர்க்கை ஆகியவை உண்டாகும்.

அஷ்டமத்துச் சனி அலைக்கழிக்குமா?

இந்த முறை கும்ப ராசிக் காரர்களுக்கு அஷ்டமத்துச் சனி! புதன் வீட்டில் சனி அமர்வதாலும் சுமார் 780 நாட்கள் அஷ்டமத்தில் இருக்கப் போகும் சனிபகவானை, 428 நாட்கள் குரு பகவான் பார்க்க இருப்பதாலும் அஷ்டமத்துச் சனியால் அதிக பாதிப்புகள் இருக்காது!

- கணித்தவர் கே.பி. வித்யாதரன்

12 ராசிக்குமான பரிகாரங்கள்

மேஷம்: ஸ்ரீஅனுமன், சஞ்சீவி மலையை தூக்கிச் சென்றபோது சற்று ஓய்வெடுத்த தலம், அய்யங்கார்குளம்- ஸ்ரீசஞ்சீவி ராயர் ஆலயம். காஞ்சிபுரம் அருகே உள்ள, பழைமையான இந்த தலத்தின் ஸ்ரீசஞ்சீவிராயரை வணங்குங்கள். எல்லா வளமும் கிட்டும். ஏழை மாணவனின் கல்வி கட்டணத்தை செலுத்துங்கள்.

ரிஷபம்: வேலூருக்கு அருகில் உள்ளது சேண்பாக்கம். இங்கே, ஸ்ரீஆதிசங்கரரால் ஸ்ரீசக்ர பிரதிஷ்டை செய்யப்பட்டதும், 11 சுயம்பு விநாயகர்கள் அருள் புரிவதுமான ஆலயம் உள்ளது.காஞ்சி மகா பெரியவரால் ஆராதிக்கப்பட்ட இந்த ஆலயத் தின் ஸ்ரீசெல்வ விநாயகரை வணங் குங்கள். விதவைப் பெண்ணுக்கு பொருளுதவி செய்யுங்கள்.

மிதுனம்: பாளையங்கோட்டை - ஸ்ரீராஜகோபால ஸ்வாமி கோயிலில் அருள்பாலிக்கும், அர்ஜுனனால் பூஜிக்கப்பட்ட ஸ்ரீவேதவல்லி- குமுதவல்லி சமேத ஸ்ரீவேத நாராயண பெருமாளை வணங்குங்கள். தொழு நோயாளிக்கு உதவுங்கள்.

கடகம்: தஞ்சாவூர்- திருக் கண்டியூர் சாலையில் உள்ள தலம் திருச்சோற்றுத்துறை. இங்கே சுயம்பு மூர்த்தியாக ஜொலிக்கும் ஸ்ரீஅன்னபூரணி சமேத ஸ்ரீஓதனவனேஸ்வரரை வணங்குங்கள். கர்ப்பிணி பெண்ணுக்கு உதவுங்கள்.

சிம்மம்: திண்டிவனம் அருகே உள்ள திருவக்கரை சென்று ஸ்ரீவக்ரகாளி, ஸ்ரீசந்திரசேகரரை தரிசிப்பதுடன், தனிச் சந்நிதியில் அருள்பாலிக்கும் ஸ்ரீகுண்டலேகி சித்தரின் ஜீவசமாதியில் தியானம் செய்யுங்கள். பசுக்களுக்கு உணவு அளியுங்கள்.

கன்னி: பதினெட்டு சித்தர்களை 18 படிகளாக கொண்டு, அஷ்டமா ஸித்தியை அருளும் சபரிமலை ஸ்ரீசுவாமி ஐயப்பனை, முறைப்படி மாலை அணிந்து 48 நாள் விரதமிருந்து வணங்குங்கள். உழவாரப் பணி செய்யுங்கள்.

துலாம்: ஆந்திர மாநிலம்- கடப்பாவில் இருந்து சுமார் 130 கி.மீ தொலைவில் உள்ளது அகோபிலம். திருமங்கையாழ்வாரால் கொண்டாடப்பட்ட இந்தத் தலத்தில் அருள் பாலிக்கும் நவ நரசிம்மர்களையும் வணங்குங்கள். தாயை இழந்த பிள்ளைக்கு உதவுங்கள்.

விருச்சிகம்: கும்பகோணத்தில் இருந்து சுமார் 13 கி.மீ. தொலைவில் உள்ளது அம்மன்குடி. ராஜராஜசோழன், அவருடைய அமைச்சர் பிரம்மராயர் ஆகியோர் வழிபட்ட தலம் இது! இங்கே, மகிஷனை வதம் செய்த கோலத்துடன் அருள்பாலிக்கும் ஸ்ரீஅஷ்டபுஜ துர்கையை வணங்குங்கள். பார்வையற்றவர்களுக்கு உதவுங்கள்.

தனுசு: பஞ்ச பூதங்களில் நிலத்துக்கு உரிய தலம் காஞ்சி புரம். பார்வதிதேவி மாமரத்தின் அடியில் தவம் செய்த தலம்; பார்வதி தேவியை சிவனார் மணம் புரிந்த தலம்... இப்படி பல பெருமைகள் கொண்ட காஞ்சி ஸ்ரீஏகாம்பரேஸ்வரரை வணங்குங்கள். தந்தையை இழந்தவர்களுக்கு உதவுங்கள்.

மகரம்: ஆழ்வார்கள் மற்றும் மன்னர்கள் பலரும் துதித்த தலம்; ஸ்ரீமத் ராமானுஜரால் ஆராதிக்கப்பட்ட தலம்... திருவேங்கடம் எனும் திருப்பதி! இங்கு அருளும் ஸ்ரீவேங்கடாசலபதி மற்றும் அருகிலேயே அருள் பாலிக்கும் ஸ்ரீவராகர் ஆகியோரை வணங்குங்கள். சுமை தூக்கும் தொழிலாளிக்கு உதவுங்கள்.

கும்பம்: கும்பகோணத்தில் இருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ளது ஆவூர். தசரதர் வழிபட்ட இந்த தலத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீபசுபதீஸ்வரர் மற்றும் ஆலயத்தில் உள்ள பஞ்ச பைரவர்கள் ஆகியோரை வணங்குங்கள். ஏழைப் பெண்ணின் திருமணத்துக்கு உதவுங்கள்.

மீனம்: நினைத்தாலே முக்தி தரும் அற்புத திருத்தலம்... திருவண்ணாமலை. இந்த தலம் சென்று, ஸ்ரீஉண்ணா முலையம்மை சமேத ஸ்ரீஅருணா சலேஸ்வரரை தரிசித்து மலையடிவாரத்தில் ஜீவசமாதி கொண்டு அருள் புரியும் ஸ்ரீரமண மகரிஷி, ஸ்ரீசேஷாத்ரி சுவாமிகள், யோகி ராம்சுரத்குமார் ஆகியோரது ஆஸ்ரமத்துக்குச் சென்று வணங்கி வழிபடுங்கள். காது கேளாதவர்களுக்கு உதவுங்கள்

னிதநேயமும் மண்ணாளும் யோகமும் தவறுகளை தட்டிக் கேட்கும் நெஞ்சுரமும் கொண்டவர்களே! இதுவரை உங்களின் புத்தி வீடான 5-ஆம் வீட்டில் அமர்ந்து கொண்டு உங்களை அலைக்கழிய வைத்த சனி பகவான் 26.09.2009 முதல் 21.12.2011 வரை விபரீத வீடான 6-ஆம் வீட்டில் அமர்ந்து திடீர் யோகங்களையும், வசதி வாய்ப்புகளையும் அள்ளித்தரவுள்ளார்.

இதுவரை இருந்த காரியத்தடை, வீண் மன உளைச்சல், குடும்பத்தில் சண்டை- சச்சரவு ஆகியவை மாறும். பிரிந்திருந்த தம்பதி ஒன்று சேருவர். மாதவிடாய்க் கோளாறு, கர்ப்பச்சிதைவு ஆகிய பிரச்னைகள் மாறி, மனைவியின் தேக ஆரோக்கியம் கூடும். பிள்ளைகளின் எதிர்காலத்துக்காக சேமிக்கத் துவங்குவீர்கள். தள்ளிப் போன மகளின் திருமணம் நடந்தேறும். பெற்றோரின் உடல் நிலை சரியாகும். தாயார் வழி உறவினர்களுடன் இருந்த மோதல் போக்கு விலகும்.

சனி பகவானின் நட்சத்திர சஞ்சாரம்:

உங்களின் பூர்வபுண்யாதிபதியான சூரியனின் உத்திர நட்சத்திர சாரத்தில் 26.09.2009 முதல் 19.09.2010 வரை சனி பகவான் செல்வதால், செல்வாக்கு மற்றும் புகழ் கூடும். பழைய கடனை பைசல் செய்வீர்கள். பங்காளிப் பிரச்னை தீரும். வழக்கில் வெற்றி கிட்டும். அரசு பதவிகள் தேடி வரும். எனினும் 10.1.2010 முதல் 8.05.2010 வரை வக்கிரத்தில் செல்வதால் பிள்ளைகளுடன் கருத்துமோதல் ஏற்படும். எதிலும் நிதானம் தேவை.

உங்களின் சுகாதிபதியான சந்திரனின் அஸ்த நட்சத்திர சாரத்தில் 20.09.2010 முதல் 14.10.2011 வரை சனி பகவான் செல்வதால் வீடு, மனை வாங்குவது-விற்பது லாபம் தரும். சொத்து சேரும். தாயாருக்கு இருந்த நோய் விலகும். தர்ம காரியங்கள் செய்வீர்கள். 23.01.2011 முதல் 15.06.2011 வரை வக்கிரத்தில் செல்வதால் சிறு விபத்து, மன உளைச்சல், தாயாருக்கு மருத்துவச் செலவு ஆகியன வந்து நீங்கும்.

உங்களின் ராசிநாதனான செவ்வாயின் சித்திரை நட்சத்திர சாரத்தில் 15.10.2011 முதல் 21.12.2011 வரை சனி பகவான் செல்வதால் உங்களது திறமை வெளிப்படும். தோற்றப் பொலிவு கூடும். பிரிந்த சகோதரர்கள் சேருவர்.

பேச்சில் தெளிவு பிறக்கும். பூர்வீகச் சொத்தில் இருந்த பிரச்னை நீங்கும். வி..பி-களின் துணையுடன் முக்கிய பிரச்னைக்கு தீர்வு காண்பீர்கள். குழந்தை பாக்கியம் உண்டாகும். புதிய வீடு, வாகனம் வாங்குவீர்கள். பாதியில் நின்ற வீடு கட்டும் பணி முழுமையடையும். ஆடை- ஆபரணங்கள் சேரும். கௌரவப் பதவிகள் தேடி வரும். நல்லவர் யார், கெட்டவர் யார் என அறிவீர்கள். அயல்நாடு செல்வதற்கு விசா கிடைக்கும். அரசு காரியங்களில் இருந்த பின்னடைவு விலகும். ஒதுங்கிச் சென்றவர்கள் வலிய வந்து உறவாடுவர். வேற்று இனத்தவரால் பயன் உண்டு. வெளி மாநில புண்ணியத் தலங்களுக்குச் செல்வீர்கள்.

வியாபாரத்தில் இருந்த தேக்க நிலை மாறும். பேச்சு சாமர்த்தியத்தில் பாக்கியை வசூல் செய்வீர்கள். நல்ல பணியாட்கள் கிடைப்பர். கெமிக்கல், இரும்பு, சிமெண்ட், மருந்து மற்றும் துணி வகைகளால் லாபம் அடைவீர்கள். பங்குதாரர்கள் உங்களின் பேச்சுக்கு தலையசைப்பர். வாடிக்கையாளர்களுக்கு சலுகைகளை அறிமுகப்படுத்துவீர்கள்.

உத்தியோகத்தில் மனப் போராட்டம் ஓயும். சக ஊழியர்கள் நட்புக் கரம் நீட்டுவர். மேலதிகாரியும் பரிவுடன் நடந்து கொள்வார். சம்பளம் உயரும். திறமைக்கு ஏற்ற பாராட்டு, பதவி உயர்வு தேடி வரும். வெளிநாட்டு நிறுவனங்களில் இருந்து வாய்ப்புகள் வரும்.

பெண்களின் திருமணப் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படும். கண் எரிச்சல், முகப்பரு, அடிவயிற்றில் வலி ஆகியன நீங்கும். தடைப்பட்ட கல்வியைத் தொடருவீர்கள். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.

மாணவர்கள், உயர்கல்வியில் அதிக மதிப்பெண்ணுடன் வெற்றி பெறுவீர்கள். விளையாட்டுப் போட்டிகளில் பரிசு பெறுவீர்கள். கலைஞர்களது திறமைக்கு மதிப்பு கிடைக்கும். வீண் வதந்தி விலகும். அரசால் கௌரவிக்கப்படுவீர்கள்.

இந்த சனிப்பெயர்ச்சி முன்னேற்றப் பாதைக்கு உங்களை அழைத்துச் செல்லும்; பிரபலங்களின் பட்டியலில் இடம் பிடிக்க வைக்கும்.

ழுத்தமான கொள்கைவாதியான நீங்கள், பகைவருக்கும் உதவும் பரந்த மனம் கொண்டவர்கள். இதுவரை உங்கள் ராசிக்கு 4-ஆம் வீட்டில் அமர்ந்து கொண்டு உங்களை நாலாபுறத்திலும் துரத்தியடித்த சனி பகவான், இப்போது 26.09.2009 முதல் 21.12.2011 வரை உள்ள காலகட்டங்களில் 5-ஆம் வீட்டில் அமர்வதால் தாழ்வு மனப்பான்மை மற்றும் பயம் விலகும்.

திறமை வெளிப்படும். புதிய முயற்சியில் ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் கலகலப்பு கூடும். சந்தேகம் மற்றும் ஈகோவால் பிரிந்த தம்பதி ஒன்று சேருவர். தாயாரின் மருத்துவச் செலவு குறைந்து ஆரோக்கியம் கூடும்.

பிள்ளைகள் ஸ்தானத்தில் சனி அமர்வதால் பிள்ளைகளிடம் அதிக கண்டிப்பு காட்ட வேண்டாம். அவர்களது நட்பு வட்டத்தை உற்று கவனியுங்கள்! உங்களின் விருப்பத்துக்காக அவர்கள் விரும்பாத பாடத்தில் சேரும்படி வற்புறுத்தாதீர்கள். மகளுக்கு வரன் பார்ப்பதில் கூடுதல் கவனம் தேவை. குழப்பம் மற்றும் சிக்கலை ஏற்படுத்தியவர்களை இனம் கண்டு கொள்வதுடன், அவர்களைப் புறந்தள்ளுவீர்கள். நெஞ்சு வலி மற்றும் தலைச்சுற்றல் ஆகியன விலகும். எதிலும் பக்குவமாக நடந்து கொள்வீர்கள்.

சனி பகவானின் நட்சத்திர சஞ்சாரம்:

உங்களின் சுகாதிபதியான சூரியனின் உத்திர நட்சத்திர சாரத்தில் 26.09.2009 முதல் 19.09.2010 வரை சனி பகவான் செல்வதால் வாகனம் வாங்குவீர்கள். பாதியில் நின்ற வீடு கட்டும் பணி முழுமை பெறும். 10.1.2010 முதல் 8.05.2010 வரை வக்கிரத்தில் செல்வதால் தாயாரின் உடல்நிலை லேசாக பாதிக்கும். வாகனத்தில் செல்லும்போது நிதானம் தேவை.

உங்களின் தைரிய ஸ்தானாதிபதியான சந்திரனின் அஸ்த நட்சத்திர சாரத்தில் 20.09.2010 முதல் 14.10.2011 வரை சனி பகவான் செல்வதால் இளைய சகோதரர்களால் ஆதாயம் உண்டு. பெரிய பதவி தேடி வரும். ஆடை- ஆபரணம் சேரும். 23.01.2011 முதல் 15.06.2011 வரை வக்கிரத்தில் செல்வதால் வீண் செலவு மற்றும் அலைச்சல் உண்டு.

உங்களின் சப்தம விரய ஸ்தானாதிபதியான செவ்வாயின் சித்திரை நட்சத்திர சாரத்தில் 15.10.2011 முதல் 21.12.2011 வரை சனி பகவான் செல்வதால் மனைவி வழி உறவினர்கள் மதிப்பார்கள். சொத்து சேரும்.

சனி பகவான் 7-ஆம் வீட்டைப் பார்ப்பதால் அந்தரங்க விஷயங்களை எவரிடமும் சொல்லாதீர்கள். வாக்கு ஸ்தானத்தையும் பார்ப்பதால் எவரையும் கடுமையாக விமர்சிக்க வேண்டாம். வெளிவட்டாரத்தில் எவரையும் நம்பாதீர்கள்.

அரசியல்வாதிகள், தலைமையை அனுசரித்துப் போவது நல்லது. சொத்துப் பிரச்னையில் நல்ல மாற்றம் ஏற்படும். பழைய சொத்தினை விற்று புதிய சொத்து வாங்குவீர்கள். உறவினர்களிடம் இடைவெளியுடன் பழகுங்கள். யோகா மற்றும் உடற்பயிற்சி ஆகியவற்றில் ஈடுபடுங்கள். குலதெய்வக் கோயிலுக்குச் செல்வீர்கள். அக்கம் பக்கத்தாரை அனுசரித்துப் போவது நல்லது.

வியாபாரத்தில் இருந்த தடுமாற்றம் நீங்கும். போட்டி மற்றும் சூழ்ச்சிகளை சமாளிப்பீர்கள். வேலையாட்கள் ஒத்துழைப்பர். வராத கடனும் வந்து சேரும். புதிய யுக்தியின் மூலம் வாடிக்கையாளர்கள் அதிகரிப்பர். பங்குதாரர்கள் அனுசரித்துப் போவார்.

உத்தியோகத்தில் உங்களைக் குறை கூறிய நிலை மாறும். உயர் பதவி தேடி வரும். சக பணியாளர்கள் உதவுவர். சம்பளம் உயரும். இழந்த சலுகையை மீண்டும் பெறுவீர்கள். மேலதிகாரி உங்களின் திறமையை மதிப்பார்.

பெண்களின் திருமணப் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படும். மாணவர்கள் விடுபட்ட பட்டப் படிப்பைத் தொடர்வர். அவர்களின் மந்த நிலை மாறும். மறதி விலகும். சுறுசுறுப்பாகச் செயல்படுவார்கள். தேர்வில் அதிக மதிப்பெண் எடுப்பார்கள். கலைஞர்களுக்கு வாய்ப்புகள் தேடி வரும். பரிசு- பாராட்டு கிடைக்கும்.

இந்த சனிப்பெயர்ச்சி அலைக்கழிப்பு, அவமானம் மற்றும் கடன் பிரச்னைகளில் இருந்து உங்களை மீளச் செய்யும். வெற்றிப் பாதையில் வீறுநடை போடுவீர்கள்.

னம் விட்டுப் பேசும் நீங்கள், தயாள குணம் கொண்டவர்கள். இதுவரை உங்கள் ராசிக்கு 3-ஆம் வீட்டில் அமர்ந்து, பல பிரச்னைகளையும் சமாளிக்கும் சக்தியையும் தந்த சனி பகவான், இப்போது சுக வீடான 4-ஆம் வீட்டில் 26.09.2009 முதல் 21.12.2011 வரை வந்து அமர்கிறார். எனவே 'அர்த்தாஷ்டமச் சனி அல்லல்படுத்துமே...' என்று வருந்தாதீர்கள்.

உங்கள் ராசிக்கு பிரபல யோகாதிபதியே சனி பகவான்தான். அவர் 4-ஆம் வீட்டுக்கு வந்தாலும் ஓரளவு நல்லதையே செய்வார். குரு பகவானின் பார்வையையும் சனி பகவான் பெறுவதால் சனியால் ஏற்படும் கெடு பலன்கள் குறையும். சனியின் பார்வை 6-ஆம் வீட்டில் விழுவதால் பழைய பிரச்னைகளுக்கு தீர்வு கிட்டும். எதிரிகள் பலவீனமடைவர். வழக்கு சாதகமாக இருக்கும். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். தடைப்பட்ட காரியத்தை முடிப்பீர்கள்.

சனி உங்கள் ராசியையும் பார்ப்பதால் வயிற்று வலி, மூலம் ஆகியன வந்து நீங்கும். காலில் அடிபட வாய்ப்பு உண்டு. தேமல், முகப்பரு வந்து செல்லும். பெரிய நோய்க்கான அறிகுறிகள் தெரியும். ஆனால், பயம் வேண்டாம். தம்பதிக்குள் வீண் சந்தேகம், வாக்குவாதம் மற்றும் ஈகோ பிரச்னைகள் வந்து போகும். விட்டுக்கொடுப்பது நல்லது. இளைய சகோதரர் உங்களைப் புரிந்து கொள்வார். தாயாரின் உடல்நிலையில் கவனம் தேவை. கூட்டுக் குடும்பத்தில் இருப்பவர்கள், ஒருவரை ஒருவர் அனுசரித்துப் போகவும்.

பூர்வ புண்ணிய ஸ்தானத்தின் மீது இருந்த சனியின் பார்வை விலகுவதால், குழந்தை பாக்கியம் கிடைக்கும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வர். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கு வெளிநாட்டில் படிக்கும் வாய்ப்பு தேடி வரும்.

சனி பகவானின் நட்சத்திர சஞ்சாரம்:

உங்களின் தைரிய ஸ்தான அதிபதியான சூரியனின் உத்திர நட்சத்திர சாரத்தில் 26.09.2009 முதல் 19.09.2010 வரை சனி பகவான் செல்வதால் வி..பி-கள் அறிமுகமாவர். அரசியலில் செல்வாக்கு கூடும். எதிர்பார்த்த பணம் வரும். 10.1.2010 முதல் 8.05.2010 வரை வக்கிரத்தில் செல்வதால் எவருக்கும் ஜாமீன் போட வேண்டாம்.

உங்களின் தனாதிபதியான சந்திரனின் அஸ்த நட்சத்திர சாரத்தில் 20.09.2010 முதல் 14.10.2011 வரை சனி பகவான் செல்வதால் திடீர் பணவரவு, குடும்பத்தில் அமைதி, ஆபரணச் சேர்க்கை உண்டு. 23.01.2011 முதல் 15.06.2011 வரை வக்கிரத்தில் செல்வதால் சளி, காய்ச்சல், பல் வலி மற்றும் பார்வைக் கோளாறு ஆகியன வந்து நீங்கும்.

உங்களின் ரோக லாபாதிபதியான செவ்வாயின் சித்திரை நட்சத்திர சாரத்தில் 15.10.2011 முதல் 21.12.2011 வரை சனி பகவான் செல்வதால் சொத்து வாங்குவீர்கள். மூத்த சகோதரர்களுடன் கருத்துமோதல், கடன் பிரச்னை, சிறுசிறு விபத்து ஆகியன வரக்கூடும். வீடு- வாகன பராமரிப்புச் செலவுகள் உண்டு. புதிய வாகனம் வாங்குவீர்கள். சிலர் சொந்த வீட்டில் குடியேறுவர்.

இருப்பினும் சொத்து வாங்கும் போது கவனம் தேவை. வங்கிக் கடன் கிடைக்கும். காரம் மற்றும் அசைவ உணவை அறவே தவிர்க்கவும். கீரை மற்றும் பழ வகைகளை அதிகம் உணவில் சேருங்கள். அரசு காரியம் முன்னேற்றம் தரும். குலதெய்வக் கோயிலை புதுப்பிக்க உதவுவீர்கள்.

வியாபாரத்தில், மறைமுகப் போட்டி அதிகரிக்கும். சிலரது தவறான ஆலோசனைகளை ஏற்க வேண்டாம். கனிவாகப் பேசி பாக்கியை வசூலியுங் கள். முக்கியமான வேலைகளை மற்றவர்களிடம் ஒப்படைக்காதீர்கள். ஸ்டேஷனரி, உணவுப் பொருட்கள், ரசாயன வகை லாபம் தரும்.

உத்தியோகத்தில் பொறுப்பு அதிகரிக்கும். தானுண்டு தன் வேலையுண்டு என்று இருப்பது நல்லது. அலுவலக ரகசியங்களை எவரிடமும் சொல்லாதீர்கள். புதிய வாய்ப்புகளை பல முறை யோசித்த பிறகு பயன்படுத்துங்கள். சக ஊழியர்களுக்குள் மனஸ்தாபம் ஏற்படும். மேலதிகாரி ஆதரிப்பார்.

பெண்களின் தடைப்பட்ட திருமணம் நடந்தேறும். மாணவர்களுக்கு படிப்பில் கவனம் தேவை.

கலைஞர்கள், வீண் வதந்திகளால் மனம் தளர வேண்டாம். சமயோசித புத்தியால் சாதிப்பீர்கள். வசதி வாய்ப்புகள் பெருகும்.

இந்த சனிப் பெயர்ச்சி, வாழும் கலையைக் கற்றுத் தரும் பாடமாகவே உங்களுக்கு அமையும்.

ள்ளம் கபடமில்லாதவர் நீங்கள். இதுவரை பாதச் சனியாக அமர்ந்து உங்களை பல வழிகளிலும் பாடாய்ப் படுத்திய சனி பகவான், 26.09.2009 முதல் 21.12.2011 வரை ராஜ யோகம் தரும் வீடான 3-ஆம் வீட்டில் அமர்ந்து, திடீர் யோகங்களை அள்ளித் தரப் போகிறார்.

இதுவரை இருந்த கஷ்டம், சோகம் மற்றும் அவமானங்கள் அனைத்தும் மாறும். முகப் பொலிவு கூடும். இதுவரை எதற்கெடுத்தாலும் சண்டையிட்ட நிலை மாறி, தம்பதிக்குள் ஒற்றுமை வளரும். உங்களுக்கு தீங்கு விளைவித்தவர்களை ஓரங்கட்டுவீர்கள். கேட்ட இடத்தில் பண உதவி கிடைக்கும். எதிர்காலத்துக்காக சேமிப்பீர்கள். நெடுநாள் ஆசையான வீடு வாங்கும் திட்டம் நிறைவேறும். புதிய வீட்டில் குடியமர்வீர்கள்.

சனி பகவானின் நட்சத்திர சஞ்சாரம்:

உங்களின் தன ஸ்தானாதிபதியான சூரியனின் உத்திர நட்சத்திர சாரத்தில் 26.09.2009 முதல் 19.09.2010 வரை சனி பகவான் செல்வதால், நாடாளுபவர்கள் உதவுவார்கள். பதவிகள் தேடி வரும். பேச்சில் கம்பீரம் கூடும். குடும்பத்தில் நல்லது நடக்கும். என்றாலும் 10.1.2010 முதல் 8.05.2010 வரை வக்கிரத்தில் செல்வதால் பணப் பற்றாக்குறை, வீண்பழி, அரசு காரியங்களில் இழுபறி ஆகியன ஏற்படும்.

உங்கள் ராசிநாதனான சந்திரனின் அஸ்த நட்சத்திர சாரத்தில் 20.09.2010 முதல் 14.10.2011 வரை சனி பகவான் செல்வதால் எதிலும் வெற்றி, திடீர் பணவரவு, சொத்துச் சேர்க்கை மற்றும் அரசு மரியாதை ஆகியன ஏற்படும். 23.01.2011 முதல் 15.06.2011 வரை வக்கிரத்தில் செல்வதால் உடல்நலக் குறைவு, ஏமாற்றம், இழப்பு ஆகியன வந்து நீங்கும்.

உங்களின் யோகாதிபதியான செவ்வாயின் சித்திரை நட்சத்திர சாரத்தில் 15.10.2011 முதல் 21.12.2011 வரை சனி பகவான் செல்வதால் பிள்ளைகளால் பெருமை, சமூக அந்தஸ்து, உத்தியோக உயர்வு ஆகியன உண்டாகும். பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றம் ஏற்படும்.

மகனுக்கு வெளிநாட்டில் வேலை கிடைக்கும். மகளின் தடைப்பட்ட திருமணம் நடந்தேறும். குழந்தை இல்லாதவர்களுக்கு பிள்ளை பாக்கியம் உண்டாகும். மூத்த சகோதரி உதவுவார். தாய் மாமன், அத்தை வழி உறவுகள் இடையே இருந்த பிணக்குகள் நீங்கும்.

வெளிவட்டாரத்தில் மதிப்பு உயரும். பெரிய பதவியில் இருப்பவர்களது நட்பு கிடைக்கும், சொந்த ஊரில் திருவிழாக்களை நடத்துவீர்கள். அரசியல்வாதிகள், தலைமைக்கு நெருக்கமாவர். வெளிநாட்டுப் பயணம் தேடி வரும். அக்கம்பக்கத்தாருடன் இருந்த மனக்கசப்பு விலகும்.

வியாபாரத்தைத் தொடர முடியாமல் திணறிய நிலை மாறும். முதலீடு செய்வதற்கு பணம் கிடைக்கும். புதிய யுக்திகளைப் பயன்படுத்தி விளம்பரங்களைச் செய்வீர்கள். அதன்மூலம் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

மருந்து, உணவு, கட்டட வகைகளால் லாபம் உண்டு. முரண்பாடாகப் பேசி, நடந்து கொண்ட பணியாளர்கள் தங்களின் நிலையை மாற்றிக் கொள்வார்கள். தொழிலில் வேலையாட்கள் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.

பகைவர்களைப் போல் இதுவரை பாராமுகத்தோடு நடந்து கொண்ட பங்குதாரர்கள், இனி உங்களைப் புரிந்து கொள்வார்கள். வியாபார ரீதியாக புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். அரசு கெடுபிடிகள் விலகும்.

உத்தியோகத்தில், நீங்கள் எந்த வேலையைச் செய்தாலும் குறை கண்டுபிடித்த நிலை மாறி, உங்களை மேலதிகாரி பாராட்டும் அளவுக்கு உயர்வீர்கள். சக ஊழியர்களும் உங்களைப் புரிந்து கொண்டு நடப்பார்கள். பதவி மற்றும் சம்பள உயர்வு உங்களைத் தேடி வரும். உத்தியோகம் தொடர்பான வழக்கில் வெற்றி கிடைக்கும்.

கன்னிப் பெண்களின் தடைப்பட்ட படிப்பு தொடரும். வாழ்வில் வசந்தம் வீசும். பெற்றோர் புரிந்து கொண்டு நடப்பார்கள். நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும்.

மாணவர்களின் சோம்பல் மற்றும் விரக்தி விலகும். தேர்வில் அதிக மதிப்பெண் கிடைக்கும். கலைஞர்களின் படைப்புகளுக்கு விருது கிடைக்கும்.

இந்த சனிப் பெயர்ச்சி, கடைக் கோடியில் தவித்த உங்களுக்குக் கைகொடுத்து மேலேற வைக்கும்

சீர்திருத்தச் சிந்தனை அதிகம் கொண்ட நீங்கள், அடித்தட்டு மக்களுக்கு உதவும் குணம் கொண்டவர்கள். இதுவரை ஜென்மச் சனியாக இருந்து திக்கு திசை அறியாது சனி பகவான் உங்களைச் சிதறடித்தாரே! குடும்பம் இருந்தும் தனிமரம் போல் தனிமைப் பொழுது கழித்தீர்களே... அந்த நிலை மாறப் போகிறது.

26.09.2009 முதல் 21.12.2011 வரை உங்கள் ராசியை விட்டு விலகி பாதச் சனியாக அமர்ந்து உங்களை ஆளப் போகிறார். பயம் விலகி, உணர்ச்சி வசப்படாமல் அறிவு பூர்வமாக யோசிப்பீர்கள். உங்களைச் சுற்றியுள்ளவர்களது சுயரூபத்தை அறிந்து கொள்வீர்கள். தூக்கம் வராமல் தவித்த நிலை மாறும். மனைவி முகத்தில் சந்தோஷம் நிலைக்கும். குடும்பத்தில் குதூகலம் பிறக்கும்.

சனி பகவான் இப்போது 2-ஆம் வீட்டுக்கு வருவதால் தம்பதிக்குள் வாக்குவாதம், கருத்து வேறுபாடு, வீண் சந்தேகம் ஆகியன ஏற்பட வாய்ப்பு உண்டு.

வங்கிக் கணக்கில் பண இருப்பைத் தெரிந்துகொண்டு காசோலையைக் கொடுப்பது நல்லது. எதிலும் நிதானமாகவும் முன் ஜா£க்கிரதையுடனும் செயல்படுவது நல்லது. கண் வலி, பல் வலி ஆகியன வந்து போகும். காலில் அடிக்கடி அடிபடும்.

பிள்ளைகள் உங்களைப் பார்த்து திருந்தும் அளவுக்கு உங்களின் பழக்கங்களை மாற்றிக் கொள்வீர்கள். மகனது தடைப்பட்ட திருமணம் நடந்தேறும். நல்ல மணப்பெண் அமைவார். மகளது கல்வி ஆசையை நிறைவேற்றுவீர்கள்.

சனி பகவானின் நட்சத்திர சஞ்சாரம்:

உங்களின் ராசிநாதனான சூரியனின் உத்திர நட்சத்திர சாரத்தில் 26.09.2009 முதல் 19.09.2010 வரை சனி பகவான் செல்வதால், உங்களது திறமை வெளிப்படும். உங்களை எதிர்த்தவர் அடங்குவர். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள். வழக்குப் பிரச்னைகள் முடிவுக்கு வரும். மகான்களது ஆசி கிட்டும். 10.1.2010 முதல் 8.05.2010 வரை வக்கிரத்தில் செல்வதால் நெஞ்சு மற்றும் முதுகில் வலி வந்து நீங்கும். பிறரை நம்பி எதிலும் முதலீடு செய்ய வேண்டாம்.

உங்களின் விரய ஸ்தானாதிபதியான சந்திரனின் அஸ்த நட்சத்திர சாரத்தில் 20.09.2010 முதல் 14.10.2011 வரை சனி பகவான் செல்வதால் பயணங்கள் அதிகரிக்கும். புண்ணிய ஸ்தலங்களை புதுப்பிக்க உதவுவீர்கள். திருமணம், சீமந்தம், கிரகப்பிரவேசம் என வீடு களை கட்டும்.

23.01.2011 முதல் 15.06.2011 வரை வக்கிரத்தில் செல்வதால் பணத் தட்டுபாடு மற்றும் நம்பிக்கை மோசடிகளை எதிர்கொள்ள நேரிடும்.

உங்களின் சுகபாக்கிய அதிபதியான செவ்வாயின் சித்திரை நட்சத்திர சாரத்தில் 15.10.2011 முதல் 21.12.2011 வரை சனி பகவான் செல்வதால் திடீர் யோகம், சொத்துச் சேர்க்கை, பெரிய பதவி ஆகியன வந்து சேரும்.

சகோதர வகையிலான மனக்கசப்பு நீங்கும். பூர்வீகச் சொத்தை தக்க வைத்துக் கொள்ள அதிகம் செலவு செய்வீர்கள். குடும்ப ரகசியங்களை எவரிடமும் சொல்ல வேண்டாம். விலையுயர்ந்த பொருட்களை எவருக்கும் இரவல் தரவோ வாங்கவோ வேண்டாம். வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. சிறு சிறு விபத்துகள் ஏற்படலாம். வாயுக் கோளாறு வந்து நீங்கும்.

வியாபார நஷ்டத்தை அனுபவ அறிவால் சரி செய்வீர்கள். தொழில் நுணுக்கங்களைக் கற்று அறிவீர்கள். பங்குதாரர்கள் உங்களைப் புரிந்துகொண்டு நடப்பார்கள். அரசுக்கு செலுத்த வேண்டிய வரியை முறையாக, முன்னதாகவே செலுத்தி விடுங்கள்.

புதிய மற்றும் நல்ல இடத்தில் வேலை கிடைக்கும். நீண்ட நாளாக எதிர்பார்த்த பதவி உயர்வு வந்து சேரும். தொல்லை தந்த மேலதிகாரி வேறு இடத்துக்கு மாற்றலாகிப் போவார்.

கன்னிப் பெண்களது மன உளைச்சல் விலகும். போலியானவர் களை நம்பியிருந்த நிலையிலிருந்து வெளியேறி தெளிவு அடைவார்கள்.

மாணவர்கள் லட்சியத்துடன் படிப்பார்கள். மறதி ஏற்படாமல் இருக்க எழுதிப் பார்த்துப் படிக்க வேண்டும். கலைஞர்கள், வீண் வதந்தி மற்றும் விமர்சனங்களில் இருந்து விடுபடுவர்.

இந்த சனிப் பெயர்ச்சி, உங்களை வெளிச்சத்துக்கு கொண்டு வரும்; கூடவே உயர்ந்த அந்தஸ்தையும் பெற்றுத் தரும்

காரியத்தில் கறாரான நீங்கள், கலை மற்றும் இலக்கியங்களில் ஈடுபாடு கொண்டவர்கள். இதுவரை உங்கள் ராசிக்கு 12-ல் அமர்ந்து கொண்டு பணத்தை வர விடாமல் தடுத்த சனி பகவான் 26.09.2009 முதல் 21.12.2011 வரை உங்கள் ராசிக்குள்ளேயே ஜென்மச் சனியாக அமர்ந்து பலன் தரப் போகிறார்.

அதிகச் செலவு, அவமானம், மன உளைச்சல் என்று இருந்த நிலை மாறப் போகிறது. குடும்பத்தில் இருந்த கூச்சல் குழப்பம் விலகும்.

தம்பதிக்குள் இணக்கமான சூழல் உருவாகும். தாம்பத்தியம் இனிக்கும். வட்டிக்கு வாங்கிய கடனை அடைப்பீர்கள். எதிர்பார்த்த பண வரவு உண்டு.

ஜென்மச் சனி என்பதால் உடல் நலனில் கூடுதல் கவனம் தேவை. மெடி-க்ளைம் பாலிசி எடுத்துக் கொள்வது நல்லது. காரம் மற்றும் அசைவ உணவுகளை அறவே தவிர்க்கவும். வாயுக் கோளாறால் நெஞ்சு வலி, செரிமானப் பிரச்னை ஆகியன ஏற்படும். மனைவி வழியில் அலைச்சல் மற்றும் செலவு உண்டு. உறவினர்களால் தொந்தரவு ஏற்படும்.

சனி பகவானின் நட்சத்திர சஞ்சாரம்:

உங்களின் விரயாதிபதியான சூரியனின் உத்திர நட்சத்திர சாரத்தில் 26.09.2009 முதல் 19.09.2010 வரை சனி பகவான் செல்வதால், செலவு மற்றும் அலைச்சல் இருக்கும். உத்திர நட்சத்திரக்காரர்களுக்கு உடல்நலன் பாதிக்கும். குடும்பத்தில் பிரச்னை வந்து நீங்கும். 10.1.2010 முதல் 8.05.2010 வரை வக்கிரத்தில் செல்வதால் பணவரவு உண்டு. பழைய பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். வி..பி-கள் உதவுவர்.

உங்களின் லாபாதிபதியான சந்திரனின் அஸ்த நட்சத்திர சாரத்தில் 20.09.2010 முதல் 14.10.2011 வரை சனி பகவான் செல்வதால், வாழ்வில் எதிர்பாராத திருப்பங்கள் நிகழக் காரணமானவர்களை சந்திப்பீர்கள்.

ஆயினும், அஸ்த நட்சத்திரக்காரர்களுக்கு விபத்துகள், இழப்புகள், சளித் தொந்தரவு, மூட்டுவலி ஆகியன வந்து செல்லும்.

23.01.2011 முதல் 15.06.2011 வரை வக்கிரத்தில் செல்வதால் வர வேண்டிய பணம் வந்து சேரும். தூரத்து உறவினர்கள் உதவுவர்.

உங்களின் திருதிய, அட்டமாதிபதியான செவ்வாயின் சித்திரை நட்சத்திர சாரத்தில் 15.10.2011 முதல் 21.12.2011 வரை சனி பகவான் செல்வதால், நெருங்கிய உறவினர் மற்றும் நண்பர்களை இழக்க நேரிடும். சொத்துப் பிரச்னை மற்றும் சகோதர வகையில் மனவருத்தம் ஆகியன வந்து நீங்கும். பிள்ளைப் பேறு இல்லாதவர்களுக்கு அந்த பாக்கியம் கிட்டும். மகளது தடைப்பட்ட திருமணம் நல்லவிதமாக நடந்தேறும்.

உடன்பிறந்தோரிடம் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. சொன்ன சொல்லை நிறைவேற்றுவீர்கள். நேர்த்திக்கடனை சரிவரச் செலுத்து வீர்கள். வெளிவட்டாரத்தில் உங்களின் புகழ் கூடும். அரசு அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். வாகனத்தை மாற்றுவீர்கள். சிறு விபத்துகள் நேரக் கூடும். கௌரவப் பதவி தேடி வரும்.

வியாபாரத்தில் சந்தை நிலவரம் அறிந்து செயல்படுவீர்கள். கேட்ட உதவி கிடைக்கும். வேலையாட்களிடம் கனிவுடன் கறாராகவும் இருங்கள். வாடிக்கையாளர்களின் தேவை அறிந்து, தொழிலில் ஈடுபடுங்கள். பங்குதாரர்களுடனான பிணக்குகள் நீங்கும். வேற்று இனத்தவர் மற்றும் வெளிநாட்டில் உள்ளவர்கள் மூலம் புதிய தொழில் துவங்குவீர்கள்.

உத்தியோகத்தில் இதுவரை உங்களை வெறுத்த மேலதிகாரி புரிந்து கொண்டு வலிய வந்து பேசுவார். உங்களது கடின உழைப்பை அறிந்து பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு ஆகியன தேடி வரும். சக ஊழியர்களின் உதவி கிடைக்கும். அலுவலக விஷயத்தை வெளியே சொல்ல வேண்டாம். புதிய வாய்ப்புகள் தேடி வரும்.

பெண்களது தடைப்பட்ட திருமணம் கூடி வரும். எதிர்பார்த்த வேலை கிடைக்கும். மாணவர்கள் சோம்பல் நீங்கி சுறுசுறுப்பாக இருப்பார்கள். உயர்கல்வியில் அதிக மதிப்பெண் எடுப்பர். கலைஞர்கள் கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள். சம்பள பாக்கி வந்து சேரும்.

பொதுவில் இந்த சனிப் பெயர்ச்சி அலுத்துப் போயிருந்த உங்களுக்கு தன்னம்பிக்கை தரும்; பிரச்னைகளிலிருந்து விடுபட வைக்கும்!


ங்கும் எதிலும் முதலிடத்தைப் பிடிக்க நினைப்பவர் நீங்கள். இதுவரை, உங்கள் ராசிக்கு லாப வீட்டில் நின்று ஓரளவு நல்ல பலன்களை தந்த சனி பகவான், 26.09.2009 முதல் 21.12.2011 வரை விரயச் சனியாகவும் ஏழரைச் சனியின் தொடக்கமாகவும் இருந்து பலன் தருவார்.

உங்களின் பிரபல யோகாதிபதியான சனி பகவான் பாதக ஸ்தானமான 11-ஆம் வீட்டை விட்டு விலகுவது நல்லதே. இப்போது 12-ஆம் வீடான விரய வீட்டில் நுழைந்தாலும் அது நட்பு வீடாக அமைவதால் நல்லதையே செய்வார். எனவே, 'ஏழரைச் சனி தொடங்குகிறதே' என்ற கவலை வேண்டாம்.

இதுவரை உங்கள் ராசி மீது வீழ்ந்த சனியின் பார்வை இனி விலகுவதால், தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். சோர்வு நீங்கும். திறமைகளை வெளிப் படுத்த வாய்ப்புகள் கிடைக்கும். பிள்ளைகள் ஆசைப்பட்டதை வாங்கித் தருவீர்கள். குடும்பத்தில் குதூகலம் பிறக்கும். கணவன்- மனைவிக்குள் அந்நியோன்யம் பிறக்கும். குடும்ப வருமானம் உயரும். சனி பகவான் 6-ஆம் வீட்டை பார்ப்பதால், கடனில் ஒரு பகுதியை அடைக்கும் அளவுக்கு வருமானம் வரும். மூத்த சகோதரருடனான கருத்து மோதல்கள் விலகும்.

சனி பகவானின் நட்சத்திர சஞ்சாரம்:

உங்களின் பாதகாதிபதியான சூரியனின் உத்திர நட்சத்திர சாரத்தில், 26.09.2009 முதல் 19.09.2010 வரை சனி பகவான் செல்கிறார். இந்தக் காலகட்டத்தில் தந்தையின் உடல் நிலை பாதிக்கப்படலாம். அரசு காரியங்களில் தாமதம் உண்டு. சிறு சிறு விபத்துகள் ஏற்படலாம். பாகப் பிரிவினையால் பிரச்னைகள் வந்து நீங்கும். எதிர்ப்புகள் அதிகரிக்கும். யாருக்காகவும் ஜாமீன் போட வேண்டாம். 10.1.2010 முதல் 8.05.2010 வரை வக்ரத்தில் செல்வதால் கெடுபலன்கள் குறையும்.

20.09.2010 முதல் 14.10.2011 வரை உங்களின் ஜீவனாதிபதியான சந்திரனின் அஸ்த நட்சத்திர சாரத்தில் சனி பகவான் செல்வதால், வேலை கிடைக்கும்; பண வரவு அதிகரிக்கும். பெரிய பதவிகள் தேடி வரும். கோயில்களுக்குக் கும்பாபிஷேகம் நடத்துவீர்கள். திருமணத் தடை நீங்கும். எனினும், 23.01.2011 முதல் 15.06.2011 வரை வக்ரத்தில் செல்வதால் உத்தியோகத்தில் சிறு சிறு பிரச்னைகள், வீண்பழி, உறவினர் இழப்பு வரக்கூடும்.

15.10.2011 முதல் 21.12.2011 வரை உங்களின் தன- சப்தமாதிபதியான செவ்வாயின் சித்திரை நட்சத்திர சாரத்தில் சனி பகவான் செல்வதால், மனைவிக்கு வேலை கிடைக்கும். பூமி சேர்க்கை உண்டு.

பிள்ளைகளுக்காக நேரம் ஒதுக்குவீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கு நல்ல வேலை கிடைக்கும். நகைகள் வாங்குவீர்கள். சொந்த வீடு வாங்கும் ஆசை நிறைவேறும். சிலர், தங்களது வீட்டில் கூடுதலாக ஓர் அறை கட்டுவார்கள். சனி 9-ஆம் வீட்டைப் பார்ப்பதால் தந்தைக்கு மருத்துவச் செலவுகள் உண்டு. விழா மற்றும் பொது நிகழ்ச்சிகளில் எவரையும் விமர்சிக்க வேண்டாம். பழுதான வாகனத்தை மாற்றுவீர்கள்.

வியாபாரத்தில், போட்டியாளர் களுக்கு பதிலடி கொடுப்பீர்கள். பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவர். கொடுக்கல்- வாங்கலில் சிக்கல்கள் நீங்கும். கணினி உதிரிப் பாகங்கள், ரியல் எஸ்டேட் மற்றும் ஏற்றுமதி- இறக்குமதி வகைகளால் லாபம் உண்டு. வி..பி-களுடன் கூட்டு சேர்வீர்கள்.

உத்தியோகத்தில், உங்களின் உழைப்புக்கான பலன் கிடைக்கும். பதவி உயரும். வேலைகள் அதிகரிக்கும். உங்களுக்கு எதிராக சிலர் சதித்திட்டம் தீட்டுவார்கள். ஆனாலும் நீங்களே வெற்றி பெறுவீர்கள்.

கன்னிப் பெண்கள், புதியவர்களிடம் எச்சரிக்கையுடன் பழகவும். கனவுத் தொல்லை, தூக்கமின்மை வந்து போகும். கல்யாணம் கூடி வரும்.

மாணவ- மாணவியர் படிப்பில் கவனம் செலுத்துங்கள். விளையாடும்போது சிறு சிறு காயங்கள் ஏற்படலாம். கலைஞர்களே... உங்களைப் பற்றிய வீண் வதந்திகள் மறையும். படைப்புகளுக்கு பட்டிதொட்டியெங்கும் பாராட்டு கிடைக்கும். அரசு உதவும்.

பொதுவில் இந்த சனிப் பெயர்ச்சி, பழைய பிரச்னைகளில் இருந்து உங்களை விடுவிக்கும்; அலைச்சலுடன் ஆதாயம் தருவதாக அமையும்.

No comments:

Post a Comment