Wednesday, July 8, 2009

சிவகுமாரை செதுக்கிய 7 நாட்கள்

விருதுகள் அலங்கரிக்கும் வரவேற்பறையில் மனசுக்கு நெருக்கமான தோற்றத்தில் வரவேற்கிறார் சிவகுமார். முதல் பார்வையிலேயே மனிதர்களைப் படித்துவிடுபவர், இரண்டாவது வார்த்தையிலேயே மனதில் இடம் பிடித்துவிடுகிறார்!

001 "நான் அரும்பு மீசையை முறுக்கிட்டுத் திரிஞ்ச காலம். எங்க கிராமத்துல கூலி வேலை பாக்குற பொண்ணு ஒருத்தி இருந்தா. களை எடுப்பா; கதிர் அறுப்பா. அவ தலைக்குக் குளிச்சு முடி மினுங்க எண்ணெய் தேய்ச்சி இருந்தா, அன்னிக்கு மாட்டுப் பொங்கலா இருக்கும். கலரு, எடுப்பு, இடுப்புன்னு எந்த வசீகரமும் இல்லாத பொண்ணு.ஆனாலும்,அவளைப் பாக்குறப்ப எல்லாம் உடம்புக்குள்ள உஷ்ணம் ஏறும். ஆனா, அவகிட்ட ஒரு வார்த்தை பேசத் தோணாது. ஒரு நாள் அவ தனியா இருந்தப்ப போய் எதிரே நின்னுட்டேன். என் காலுக்குக் கீழ தரையே இல்லாதது கணக்கா இருக்கு. படக்குனு 'என்ன, என்னைக் கல்யாணம் கட்டிக்கணுமா?'ன்னு கேட்டுப்புட்டா. எனக்குக் கை, காலு வேர்த்து வெலவெலத்துப் போயி, ஓடி வந்துட்டேன்!

மெட்ராஸ் வந்து வேலைக்கு அலைஞ்சு திரிஞ்சுட்டு திரும்ப கிராமத்துக்கு வந்தப்ப தேடிப் பிடிச்சு அவ முன்னாடி போய் நின்னேன். 'என்ன ராசா வேணும்... நம்ம ஊர்ல எல்லாப் பயலுகளும் சீரழிஞ்சுபோகுதுங்க. நீ ஒருத்தன்தான் வேலைக்குன்னு பட்டணம் வரைக் கும் போயிட்டு வந்துருக்க. நல்லா இரு. காசு, பணம், பேரு சம்பாதிச்சுட்டா, 60 வயசுலகூட 20 வயசுப் பொண்ணு தேடி வந்து நிப்பாய்யா'ன்னு சொன்னா. எனக்குச் சொடேர்னு சம்மட்டியால மண்டையில அடிச்ச மாதிரி இருந்துச்சு. என் வாழ்க்கை மொத்தத்துக்குமான ஒழுக்கத்தைக் கத்துக்கொடுத்த போதி மரம் அவ!''

002 "அப்பா இறந்த பிறகு, அம்மாதான் எல்லாமா இருந்து என்னை வளர்த்தாங்க. மனசுக்குள்ள பாசம் இருந்தாலும் வெளிப்படுத்திக்க மாட்டா. ஒரு தடவை கீழே விழுந்து கை ஒடிஞ்சுபோச்சு. அப்ப நான் மெட்ராஸ்ல படிச்சுட்டு இருந்தேன். ஆனா, எனக்குத் தாக்கல்சொல்லாமலேயே வைத்தியம் பார்த்துக்கிட்டா. திடீர்னு ஒரு நாள் 'மதர் சீரியஸ். ஸ்டார்ட் இம்மீடியட்லி'ன்னு தந்தி. உடனே, டிரெயினைப் புடிச்சு, போற வழியில எல்லாம் புலம்பிட்டே போறேன். 'கடைசி கடைசியா என்கிட்ட ஏதாவது சொல்ற வரைக்குமாவது அவ உயிரைக் காப்பாத்து ஆண்டவா! அப்படி நீ செஞ்சுட்டீன்னா நான் உயிர் இருக்குற வரை உன்னை நம்புறேன்'னு வேண்டிக்கிட்டே போறேன்.

அப்ப பகுத்தறிவு மோகத்தோடு திரிஞ்சுட்டு இருந்த காலம். விழுந்தடிச்சு ஊருக்குள்ள ஓடி வீட்டுக்குள்ள போய் நின்னா, 'கஞ்சி குடிக்காமவயலுக்குப் போயிட்டேன். ஏறு வெயில் பாரு... சுத்திருச்சு. நினைவு தப்பிருச்சு. இல்லாங்காட்டி உன்னை அலைய விட்டுருக்க மாட்டேன் கண்ணு'னு எனக்காகக்கவலைப்படுறா. எனக்குப் போன உசுரு திரும்ப வந்தது. அம்மாவையும் ஆண்டவனையும் ஆழமா உணர்ந்த நாள்!''

003 "சென்னையில புதுப்பேட்டையில 15 ரூபா வாடகைக்கு ஒரு ரூம்ல தங்கிப் படிச்சுட்டு இருந்தேன். 25 குடும்பங்கள்... வீட்டுல ஓவியம் வரைஞ்சுகிட்டு இருந் தப்போ சத்தம் போட்ட ஒரு பையனை அடிச்சுட்டேன். அவனோட அம்மா வந்து, 'தம்பி, உங்களுக்கு அமைதியா இருக்கணும்னா தனி வீடு புடிச்சுக் குடித்தனம் பண்ணுங்க'னு சொல்லிட்டுப் போயிட்டாங்க. எனக்குப் பெரிய அவமானமாப் போச்சு. மறுநாள் அவங்க வீட்டு பாப்பாவுக்குப் பிறந்த நாள்.

அவங்கவீட்டுல யாருக்கு பிறந்த நாள்னாலும் அந்த காம்பவுண்ட்ல இருக்குற 25 வீட்டுக்கும் கேக், வடை போயிரும். 'நம்மளைத் தப்பாப் பேசிட்டாங்க. அந்த கேக், வடையைச் சாப்பிடக் கூடாது'ன்னு வைராக்கியமா, மத்தியானமே ரூமைவிட்டுக் கிளம்பிட்டேன். அங்கே இங்கேனுதிரிஞ்சுட்டு, ராத்திரி ஒரு மணிக்கு மேல வந்தா அந்தஅம்மா மட்டும் தனியா உக்காந்துருக்காங்க. 'அரை மணி நேரம் முன்னாடி வரை ஃபிலோமினா, 'மாமா எங்கே காணோம்'னு கேட்டுட்டே இருந்துட்டு இப்பத்தான் தூங்கிப் போனா. உனக்கு கேக், வடை குடுக்கணும்னுதான் நான் முழிச்சுட்டே இருந்தேன்'னு கரிசனமா கேக், வடை நீட்டுறாங்க. எனக்கு வெட்கமாப் போயிருச்சு. விக்கிக்கிட்டே சாப்பிட்டேன், ஃபிலோமினா பிறந்த நாள் கேக்கை! ரத்தம் மட்டுமல்ல, தாய்ப் பாசமும் ஒரே நிறம்தான்னு புரிஞ்சுக்கிட்ட நாள்!''

004 "1967. நான் சினிமாவுல நடிக்க ஆரம்பிச்ச புதுசு. ஏதோ ஒரு கூட்டத்துல பேசக் கூப்பிட்டு இருந்தாங்கன்னு போயிட்டேன். 'பொம்மைப் புலியோடு சண்டை போடுறவன் எல்லாம் ஒரு வீரனா? அட்டைக் கத்தி வீரன். கையால கண்ணை மூடிக்காம ஒரு சோகக் காட்சியில நடிக்க முடியுமா?'ன்னு மேடையில பேசுறவங்க எல்லாம் ஏதோ சூசகமாப் பேசுறாங்க. 'என்னங்க சங்கதி?'ன்னு விசாரிச்சா, சிவாஜி ரசிகர்கள் ஏற்பாடு செய்த விழா அதுன்னு சொன்னாங்க.

எனக்கு சட்டுனு எல்லாம் விளங்கிருச்சு. என்னைப் பேசச் சொன்னப்போ, 'மேலை நாடுகள்ல எல்லாம் நம்ம சிவாஜியைத் 'தென்னகத்தின் மார்லன் பிராண்டோ'ன்னு பெருமையாப் பேசுவாங்க. அவரோட பெருமைகளைப் பேசினாலே போதும். அவரைப் பாராட்டுறோம்னு மத்தவங்களை அவமானப்படுத்த வேண்டாம்'னு பேசிட்டு உக்காந்துட்டேன். 'ஏய்! இவன் அவங்க ஆளுப்பா'ன்னு கூட்டத்துல ஒரு கோஷ்டி உஷ்ணமாகி, என் போஸ்டர் மேல எல்லாம் சாணி அடிச்சுட்டாங்க.

பத்து நாள் கழிச்சு பொங்கலுக்கு நானும் சிவாஜியும் சேர்ந்து நடிச்ச 'கந்தன் கருணை' ரிலீஸ். முந்தின நாள்தான் எம்.ஜி.ஆரைத் துப்பாக்கியால் சுட்டுஇருந்தாங்க. அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு தமிழகமே பரபரப்பா இருந்தது. நான் குடும்பத்தோடு தியேட்டர்ல படம் பார்த்துட்டு வெளியே வர்றேன். சிவாஜி, முருகன் கெட்டப்ல நான் இருக்குற கட்- அவுட்கள் இருந்துச்சு. அதுல என் முகத்துல சாணி. எம்.ஜி.ஆர். இப்படிப் படுத்த படுக்கையாகிடக்கிறப்ப சிவாஜிகூட நடிச்சுட்டு இருக்கேன்னுஆத்திரத்தில் ரசிகர்கள் செய்த வேலை. 'நமக்கு நாளைக்கு ஒருவேளை பரபரப்பான நடிகன்கிற அந்தஸ்து கிடைச்சாக்கூட நம்ம பேரைச் சொல்லி ஒரு ரசிகர் மன்றம்கூட ஆரம்பிக்கக் கூடாது'ன்னு அந்த இடத்துலதான் முடிவெடுத்தேன். இளைஞர்களின் சக்தியை, நேரத்தை, சிந்தனையைக் கெடுக்குற வேலையை நம்ம மனசறிஞ்சு செஞ்சுரக் கூடாதுங்கிறதுல கடைசி வரை உறுதி இருக்கக் காரணமா, என்னை வழி நடத்திய நாள்!''

005 "நாம எவ்வளவுதான் நல்லவனா இருந்தாலும், சினிமாவில் வெற்றிகள்தான் நமக்கான மதிப்பையும் மார்க்கெட்டையும் தீர்மானிக்கும். இது எனக்கு ரொம்பச் சின்ன வயசுலயே புரிஞ்சிட்டாதால, எனக்குள்ள எந்தப் பெரிய எதிர்பார்ப் பும்இல்லாம நடிச்சுட்டே இருந்தேன். சூர்யாவுக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு வந்தது. ஒரு நடிகனின் மகனாக இருந்தாலும், சினிமா வாடையே இல்லாமல் வளர்ந்தவரு. 'இனிமேதான் நீ கத்துக்க நிறைய இருக்கு'ன்னு மட்டும் சூர்யாகிட்டே சொன்னேன்.ஒரு நாள் ஷூட்டிங் போயிட்டு வந்தவர், ஒரு வாரமா களை இழந்து சோர்வா இருந்தார். என்னன்னு கேட்ட அவங்க அம்மாகிட்டே, வேதனையோடு சில சம்பவங்களைப் பகிர்ந்துக் கிட்டார்.

'நல்ல வேலைக்குப் போயிட்டு இருந்த பையனுக்கு இந்தக் கஷ்டம் எல்லாம் தேவையாங்க?'னு என்கிட்ட அவங்க அழு தாங்க. நான் சூர்யாகிட்டே ஒண்ணே ஒண்ணுதான் சொன்னேன், 'சூர்யா! ஒரு நடிகருக்கும் இயக்குநருக்கும் இடையேயான ரிலேஷன்ஷிப் என்பது கணவன்-மனைவி உறவு மாதிரி.அதைப் பத்தி நீ உன் மனைவிகிட்டேகூடப் பகிர்ந்துக்கக் கூடாது. ஷூட்டிங்ல உனக்கு என்ன நடந்தாலும், 'சிவகுமார் பையனான நமக்கு இப்படி நடக்குதே'ன்னு நினைக்காதே. அங்கே நீ வெறும் சூர்யாதான். நீ எதிர்பார்க்கிற மரியாதையும்மதிப்பும் உனக்குக் கிடைக்கணும்னா 'சூர்யா'ங்கிற வார்த்தைக்குதிறமையும் தகுதியும் வளர்த்துக்கோ. அதுக்கு என்ன பண்ணணும்னு கேட்காதே! என்ன வேணும்னாலும் பண்ணலாம்!'னுசொன்னேன். அதுக்கப்புறம் சூர்யாவின் அணுகுமுறையே மாறிடுச்சு. மகளை 'ஆஹா ஓஹோ'ன்னு கொண்டாடிட்டு, மகன்களிடம் கொஞ்சம் கெடுபிடியாக இருக்கும் சராசரி தந்தையா நானும் இருந்தேன். ஆனாலும், ஒரு அப்பாவின் வார்த்தைகள் மகனுக்குள் என்ன மாறுதல் உண்டாக்கும்னு எனக்கு அழுத்தமாப் புரியவெச்ச நாள்!''

006 "வாழ்க்கையில் எல்லா திசைகளிலும் ஓடியாச்சு. எல்லா வசந்தங்களையும் வருத்தங்களையும் கடந்தாச்சு. இனிமே வாழ்க்கையில் புதுசா எதுவுமே இல்லையோ... பழசை அசை போட்டுட்டே இருக்க வேண்டியதுதானோன்னு தோண ஆரம்பிச்ச சமயம்... சாலமன் பாப்பையா மதுரை கம்பன் கழக விழாவுக்கு என்னை அழைச்சாரு. சும்மா போய் நின்னா நல்லா இருக்காதேன்னு கம்பராமாயணத்தைப் படிக்கலாம்னு புத்தகத்தை வரவழைச்சா, மூச்சு முட்டிப்போச்சு. விழா தேதிக்குள்ள ஒன்பது பாடல்களைப் படிச்சு பொருள் உணர்ந்துக்கிட்டேன். விழாவுல அதைக் கடகடன்னு நிகழ்கால உதாரணங்களோடு பொருத்தி சரளமாப் பேசவும் ஆச்சர்யமான வரவேற்பு! இலக்கியம், ஆன்மிகம், இதிகாசம்னு இல்லாம பாட்டி கதை சொல்றது கணக் காக் கதை சொன்னது எல்லாருக்கும் புடிச்சுப்போச்சு. 'அட! ஒன்பது பாடல்களுக்கே இத்தனை வரவேற்பா? சிவகுமாரா... இதுதான் நீ எதிர்பார்த்த அடுத்த தளம். புதுப் பாதை. இதுல போ!'ன்னு மனசுக்குள்ள ஒரு குரல். ரெண்டு வருஷம்... தினமும் இரண்டரை மணி நேரம் பயிற்சி. கம்பராமாயணம் முழுக்க ஊறிடுச்சு எனக்குள்ள.

'கம்பன் என் காதலன்'கிற தலைப்புல இரண்டு மணி நேரம் பேசும் இடங்களில் எல்லாம் வயசு வித்தியாசம் இல்லாம ரசிச்சாங்க. 'கம்பன் வாழ்ந்த வரைஅவருக் கான பேரும் பெருமையும் அடையாததால, அவரோட ஆன்மா மோட்சம் கிடைக்காம சுத்திட்டு இருந்திருக்கும். அதுக்கு நீங்க மோட்சம் கொடுத்திட்டீங்கய்யா'ன்னு கவிஞர் புவியரசு கண் கலங்க வாழ்த்தினார். உயிர் உடலைவிட்டுப் பிரியும் கடைசி விநாடி வரை வாழ்க்கை நமக்கானதுன்னு கம்பனுடனான ஒவ்வொரு நாட்களும் புரியவெச்சது!''

007 "சினிமா, நாடகம்னு 24 மணி நேரப் பரபரப்புலயே திரிஞ்சதால, கல்யாணம் கட்டி முதல் 14 வருஷம் 'என்ன அம்மிணி'ன்னு என் சம்சாரத்துக்கிட்ட ஆசையா, பாசமா ஒரு வார்த்தைபேசினது இல்லை. அத்தனை வருஷம் கழிச்சு திடீர்னு ஒரு நாள் அந்தம்மா ஞாபகம் வரவும் அவங்க பிறந்த நாளுக்கு ரகசியமா ஒரு சேலை வாங்கிக் கொடுத்தேன். 'என்ன இது புதுசா?'ன்னு கேள்விகேட்டவங்க, அந்தப் புடவையைக் கட்டிக்கவே இல்லை. 'இத்தனை வருஷம் எப்படி இருந்தீங்களோ... அப்படியே இருங்க'ன்னு சொல்லிட்டாங்க. எனக்கு மூஞ்சில அடிச்ச மாதிரி ஆச்சு! 'ச்சே... இந்தம்மா இல்லேன்னா, வீட்டையும் குழந்தைகளையும் இவ்வளவு அழகா, பொறுப்பா யார் பார்த்துட்டு இருந்திருப் பா'ன்னு ஆரம்பிச்ச யோசனை அப்படியே பல திசைகளில் பயணிக்குது.

ஒரு பெண் தன் ஆயுள் முழுக்க தந்தையை, கணவனை, மகனைன்னு யாராவது ஒரு ஆணைச் சார்ந்து இருக்கணும்னு சொல்வாங்க. ஆனா, நல்லா கவனிச்சுப் பாருங்க... அத்தனை ஆண்களும் தங்கள் வாழ்க்கையைக் கழிக்க தாயாகவோ, மனைவியாகவோ, மகளாகவோ ஏதோ ஒரு வடிவில் பெண் தேவைப்படுகிறாள். பூமி இல்லாம வாழ்க்கை சாத்தியமில்லைய்யா... அது போலத்தான் பெண்களும்!''

No comments:

Post a Comment